RSS
Write some words about you and your blog here

வெளுத்துக்கட்டு

மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு, காந்திநகரில், "பிருந்தாவன் வித்யாலயா' என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த,ஆவனங்கள் மர்மமான முறையில் கிழிந்திருந்தது. இதை, நான்காம் வகுப்பு மாணவ, மாணவியரில் ஒருவர்தான் கிழித்திருக்க வேண்டும் என்று, ஆசிரியைகள் சந்தேகமடைந்தனர். விளையாட்டு ஆசிரியர் சதீஷ்குமாரை அழைத்து, குழந்தைகளை விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இவர், வகுப்பு அறையில் வைத்து குழந்தைகளை விசாரித்துள்ளார். தாங்கள் யாரும் ரெக்கார்டை கிழிக்கவில்லை என்று கூறி குழந்தைகள் அழுதன. ஆத்திரமடைந்த ஆசிரியர் சதீஷ்குமார் 17 மாணவர்கள், 7 மாணவியரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வெயிலில் நிற்க வைத்துள்ளார். இரு கைகளையும் மேல்நோக்கி தூக்கி நிற்குமாறு கூறி, குழந்தைகளின் பின்பகுதி யில் பிரம்பு, பி.வி.சி., பைப் கொண்டு ஆத்திரம் தீர வெளுத்துள்ளார். போலீஸ் பாணியில் குற்றவாளிகளை விளாசுவது போல் தாக்கியுள்ளார். குழந்தைகள் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர். பின்பகுதியில் உள்காயம், ரத்தக்கட்டு ஏற்பட்டு நடக்கக்கூட முடியாதவகையில் குழந்தைகள் தவித்துள்ளனர்.

மாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பதறினர். அடிதாங்க முடியாமல் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு வந்து, கொடூர ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான வக்கீல் சம்பத்குமார் கூறுகையில், ""விளையாட்டு ஆசிரியர் இப்படி அடித்த விவரம் எங்களுக்கு தெரியாது என்றும். குழந்தைகளை நேரில் பார்த்த பிறகு உடனடியாக அந்த ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். என்று தான் இது போன்ற சம்பவங்களுக்கு முடிவு வருமோ....?

மனித நேயம்

சேலம் புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் நிர்வாணக் கோலத்தில் தட்டு தடுமாறியபடி வந்த முதியவரை அவ்வழியாக சென்றவர்கள் காட்சி பொருளாக கண்டனரே தவிர, அவரது மானத்தை மறைக்க யாரும் உதவிட முன்வராதது மனித நேயம் முற்றிலுமாக மரித்துப்போய் கிடக்கிறது என்ற வேதனையான உண்மையை உணர்த்தியது.

வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில் சேலம் மாநகரம் மூழ்கி கிடக்கிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரும் இங்கு ஏராளமானோர் உள்ளனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தவறுகளும், குற்றங்களும் அதிகப்படியாக உள்ளது. வாழ வழியின்றி தவிக்கும் கூட்டம் சாலையோர பிளாட்பார்ம்களில் வெயில், மழை பாராமல் கிடக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோர் அழுக்கு மூட்டைகளுடன் சுமைதாங்கிகளாக வீதியில் சுற்றிதிரிகின்றனர். அது ஒரு புறமிருக்க, உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள் பசி கொடுமையால் ஆடையின்றி குழந்தை மேனியாக வலம் வரும் நிகழ்வுகளும் சேலம் மாநகரத்தில் அதிகரித்துள்ளது. வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள தன்னார்வ அமைப்புகளை உருவாக்கும் நபர்கள், இல்லாதோர், இயலாதோருக்கு உதவ முன்வருவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் நேற்று மாலை கொட்டும் மழையில் உடலில் ஆடையின்றி முதியவர் ஒருவர் தட்டு தடுமாறியபடி புதிய கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். வாகனங்களில் சென்றோர் அவரை வேடிக்கை பார்த்தபடி சென்றனரே தவிர, முதியவரின் மானத்தை மறைக்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் நல்லாச்சி, தனியார் மொபைல் நிறுவன ஊழியர் சேதுராமன் இருவரும் முதியவருக்கு உதவ முன் வந்தனர். ஆட்டோ டிரைவர் தன்னிடம் இருந்த துண்டை எடுத்து அவருடைய இடுப்பில் கட்டி விட்டு மானத்தை மறைத்தார். மொபைல் நிறுவன ஊழியர் அருகில் இருந்த ஜவுளி கடையில் அண்ட்ராயரை வாங்கி வந்து அணிவித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் முதியவர் சோர்ந்து கிடந்தார். அவர் பெயர், ஊர் விபரம் கேட்டபோது சொல்ல முடியாமல் தவித்தார். உறவுகளால் ஒதுக்கப்பட்டு நடுரோட்டுக்கு அடித்து விரட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தன் குடும்பம், தன் மக்கள் என்று ஓடுவோர் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே உதவும் மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மனிதர்களிடம் மனித நேயம் என்பதே மரித்துப்போய் விட்ட ஒன்றாகி விட்டது.

தண்டனை

மும்பையின் கொலாபா பகுதியில் கட்டப் பட்டு வருகிற ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி என்ற 31 தளங்கள் கொண்ட அதி நவீன அடுக்கு மாடிக் கட்டடம்தான் பிரச்சனையின் மையம். அந்தக் கட்டடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட தில் நடந்துள்ள முறைகேடுகள் ஒரு சூறாவளி யாக மாநில காங்கிரஸ் அரசைப் புரட்டிக்கொண் டிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ஊழல் விவகாரங்கள் எவ்வித உறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் உள்பட நாட்டின் அனுபவம். ஆனால், முதலில் 50 வீடு களுடன் 6 மாடிக் கட்டடத்திற்கான அனுமதியுடன் 2003ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 31 மாடிக் கட்டடமாக மாற்றப்பட்ட பிரச்சனையில் முட்டிக்கொண்டிருப்பது எத்தனை கோடி ரூபாய் கைமாறியது என்ற லஞ்ச லாவண்யம் மட்டுமே அல்ல; முதலமைச்சரின் உறவினர்களுக்கும் சில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அந்தக் கட்டடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் மட்டுமே அல்ல.

இயற்கைச் சமநிலை, சுற்றுச் சூழல் விதிகள் ஆதர்ஷ் அத்துமீறலுக்காகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அடிக்கடி புயல் பாதிப்புக்கு உள்ளாகும் மும்பை போன்ற நகரங்களின் மக்களுக்கு, இயற்கையைப் பகைக்கும் வன்முறையாகி யுள்ள இப்படிப்பட்ட கட்டடங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

முக்கியமான பிரச்சனை, இந்தத் திட்டம் யாருக்காகத் தொடங்கப்பட்டு பின்னர் தடம் மாற்றப்பட்டது என்பது. 11 ஆண்டுகளுக்கு முன், தீவிரவாதிகளோடு சேர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இமயத்தின் கார்கில் பனிமலையை ஆக்கிரமித்தனர். அதை முறியடித்த போரில் இன்னுயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு நாட்டின் நன்றிக்கடனாக, அவர்களது மனைவிமார்களுக்கு வீடு வழங்கவே ஆதர்ஷ் திட்டம் உரு வாக்கப்பட்டது. பின்னர், மற்ற ராணுவ அதிகாரி களுக்காகவும் என்று விரிவுபடுத்தப்பட்டது. அதற்குப் பின், ராணுவத்தினர் அல்லாதவர்களுக் காகவும் என்று மாற்றப்பட்டது. வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலியாகத் தொடங்கப்பட்ட திட்டம், அப்பட்டமான வியாபாரத் தளமாகக் கொச்சைப்படுத்தப்பட்டது.

எந்த அளவிற்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மனசாட்சியைத் துடைத்தெறிந்தவர்களாக, அரசுப் பதவியை சுயநலத்திற்குப் பயன்படுத்து கிறவர்களாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் மேலும் பளிச்செனத் தெரிகிறது. ஆதர்ஷ் மட்டுமல்லாமல் புனே நகரின் லவாசா அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளிட்ட பல திட்டங்கள் இவ்வாறு விதிமுறைகளைக் குழியில் தள்ளி கட்டப் படுபவையே என்றும் தகவல்கள் வந்துள்ளன. இந்தப் பின்னணியில் காங்கிரஸ் தலைமை உறுதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், தவறு செய்ததற்குத் தண்டனை என்பதைவிட, மாட்டிக்கொள்ளாமல் அந்தத் தவறைச் செய்யத் தவறியதற்காகவே தண்டனை என்ற மக்களின் குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது.

ஆயிரத்தில் ஒருவன்



விடுதலை

 காவிரி தண்ணீர் பங்கீடு குறித்து இறுதி தீர்ப்பு வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. கோர்ட்டில் பிரச்னை இருந்தாலும்கூட, இறுதி தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடுவதில் எந்த தடையும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் இந்த தீர்ப்பை அமல்படுத்தக் கோரியோ அல்லது தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கோரியோ தீவிரமான அழுத்தம் தமிழகம் தரப்பில் இருந்து டில்லிக்கு அளிக்கப்படவில்லை.இதனால் காவிரி நீர் பகிர்வு என்றாலே, 1991ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பில் என்ன கூறப்பட்டதோ அதை வைத்தே இப்போது பேசப்பட்டு வருகிறது. தீர்ப்பின்படி ஜூன் முதல் செப்டம்பர் வரை 137 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு தர வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 61 டி.எம்.சி., மட்டுமே வந்துள்ளது. தமிழகத்துக்கு தர வேண்டிய பாக்கி 76 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகம் தராமல் இழுத்தடிக்கிறது.

மழை பெய்யவில்லை என்ற கர்நாடகாவின் வாதத்தை மட்டுமே மத்திய அரசு நம்புகிறது.ஆனால் கர்நாடகாவில் இருந்து வெளியாகும் நாளிதழான "டெக்கன் ஹெரால்டு' ஆங்கில நாளிதழில் கடந்த 4ம் தேதி அம்மாநில அணைகளின் நீர்மட்டம் குறித்து செய்தி வெஈயிட்டுள்ளது. அதன்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 120.60 அடி வரை நீர் உள்ளது.

கபினியின் மொத்த உயரம் 2,284 அடி. நீர் இருந்த அளவு 2,274 அடி. ஹேமாவதியின் மொத்த உயரம் 2,924 அடி. நீர்  அளவு 2,917 அடி. ஹாரங்கி அணையின் மொத்த உயரம் 2,859 அடி. நீர் அளவு 2,857.4 அடி.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான சிக்மங்களூரில் 15 செ.மீ., மழையும், ஹாசனில் 7 செ.மீ., மழையும், மைசூரில் 3 செ.மீ., மழையும் மாடிகனியில் 6.2 செ.மீ., மழையும் பெய்துள்ளது. இப்படி எல்லா அணைகளிலும் ஏறத்தாழ முழு கொள்ளளவில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொண்டே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடகம் உள்ள நிலையில் இழுத்து அடித்து வருகிறது.

தண்ணீர் திறந்துவிடுவதில் கர்நாடகம் தாமதம் செய்ய ஆரம்பித்தால், தமிழகத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி குறைந்துபோனதை போலவே சம்பா சாகுபடியும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எப்போதும் குறுவை சாகுபடியில் 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வெறும் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை நெல் பயிரிடப்பட்டது. வழக்கமாக குறுவை சாகுபடியின் போது 10 லட்சம் டன் வரை நெல் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இரண்டு லட்சம் டன் நெல் மட்டுமே இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது.சம்பா சாகுபடியும் 14 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுவது வழக்கம். மேட்டூரில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் இந்த ஆண்டு இந்த அளவு பரப்பளவில் நெல் பயிரிடப்படுமா என்பது சந்தேகம்.

நிலைமை இவ்வாறு இருக்க பிரச்சனையை திசை திருப்ப தமிழக முதல்வர் என்னவோ திடீர் அன்பு கொண்டு இலங்கையில் முகாம்களில் இருக்கும் ஈழ தமிழர்கள் மீள் குடியேற்றம் விரைவில் நடைபெற இலங்கையை வற்புறுத்த வேண்டும் என  தமிழகம் வந்த சோனியாவிடம் விமான நிலையம் சென்று வரவேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் தமிழ் நாட்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தாலும் விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும். காலம் காலமாக தமிழக டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் கழக அரசுகளிடமிருந்து என்று தான் தமிழகத்திற்கு விடுதலை கிடைக்குமோ....?

ரத்த வெறி

தீப்பெட்டியில் குச்சி உரசுவது போல் சர்வசாதரணமாக இன்று மனித உயிர்களை கொலை செய்வது சர்வசாதரணமாகி விட்டது அதுவும் அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. நெல்லையில் தன் உடன் படிக்கும் சக மாணவன் தன் பெரியப்பா மகளான அக்காவை காதலித்ததால் ஆத்திரமுற்ற அண்ணனும் சகமாணவர்களும்  சேர்ந்து இசக்கி முத்து என்ற சகமாணவனை குத்திகொலைசெய்து ஆற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.போலிசார் தேடுவதை அறிந்து ,மூவரும் சரணடைந்துள்ளன்ர். மூவருக்கும் வயது 17 தான் என்பது குறிப்பிடத்தக்கது திரைபடங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் வன்முறை காட்சிகள் சென்சார் செய்யபடாமல் ஒளிபரப்பபடுகிறது தொலைகாட்சிகளில் கொலை செய்வது போன்ற காட்சிகள் மிககொடுரமாக காட்டபடுகிறது. தொடர்ந்து இது போல வன்முறை காட்சிகள் வரமுறையின்றி காட்டப்படுமேயானால் இளம் சமுதாயத்தினர் ரத்த வெறி பிடித்து இப்படி தான் சீரழிந்து போவார்கள்

பிச்சை பாத்திரம்

உலக வங்கி, இந்தியாவுக்கு ரூ.43,000 கோடி கடன் வழங்க, சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அந்த நிதி ஆண்டில், உலக வங்கியிலிருந்து அதிக கடன் பெறுவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக வங்கி அதன் ஐ.பீ.ஆர்.டீ. மற்றும் ஐ.டீ.ஏ. ஆகிய அமைப்புகளின் வாயிலாக உலக நாடுகளுக்கு கடன் வழங்குகிறது. இதில் ஐ.பீ.ஆர்.டீ., வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடன் வழங்கி வருகிறது. இது, இந்தியாவிற்கு ரூ.31,500 கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளது. இது, இந்த அமைப்பு உலக நாடுகளுக்கு வழங்கும் மொத்த கடனில் 15.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ 640 கோடி டாலர், தென் ஆப்பிரிக்கா 380 கோடி டாலர், பிரேசில் 370 கோடி டாலர் ஆகிய நாடுகள் முறையே 2, 3 மற்றும் 4 -வது இடங்களில் உள்ளன. இந்த அமைப்பு, சென்ற நிதி ஆண்டில் இந்தியாவுக்கு ரூ.11,500 கோடி  கடன் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பிடமிருந்தும் இந்தியாதான் அதிக கடன் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற நிதி ஆண்டில், உலக வங்கியிடமிருந்து இந்தியா மொத்தம் ரூ.21,600 கோடி கடன் பெற்றுள்ளது. அந்த நிதி ஆண்டில், உலக வங்கி, இந்தியாவிற்குத்தான் அதிக கடன் வழங்கி உள்ளது. அதேசமயம், ஆசிய மேம்பாட்டு வங்கியிடமிருந்து அதிக கடன் பெற்றுள்ளதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடன் பெறுவதில் ஆசியாவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து அதிக நிதி உதவி பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 27-வது இடத்தில் உள்ளது. இப்படி உலகநாடுகளிடமும் உலக வங்கியிடமும்  பிச்சை பாத்திரம் ஏந்தி ஏந்தி பிச்சை வாங்கி வாங்கி ஆட்சி செய்பவர்கள் ஊழல் செய்து சுவிஸ் வங்கிகளில் தூங்கசெய்கின்றனர் என்பதே உண்மை 

மீண்டும் தர்மபுரி

கிருஷ்ணகிரி அருகே பள்ளி பேருந்து மோதியதில் மாணவன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துள்ளான் இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்து, பள்ளிக்கு தீ வைத்து கொளுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தர்மபுரி பிரதான சாலையில் அண்ணா அறிவகம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1000க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். 3 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும், சுரேஷ் (14) என்ற மாணவன் மிதிவண்டியில் பள்ளிக்கு வந்துள்ளான். பள்ளி வாயில் அருகே வந்தபோது, அரசம்பட்டியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வந்த அதே பள்ளியின் பேருந்து, மாணவன் மீது மோதியது. இதில் பேருந்தின்  சக்கரத்தில் சிக்கிய சுரேஷ், உடல் நசுங்கி மூளை சிதறி அதே இடத்திலேயே இறந்துள்ளான். பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த ஊர் மக்கள் மற்றும் பெற்றோர் ஆத்திரமடைந்த அவர்கள், மாணவர்களை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, பள்ளிக்கு தீ வைத்தனர். அங்கிருந்த தாளாளர் கார், பள்ளி பேருந்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தியுள்ளனர். பள்ளி மாணவன் பலியான சம்பவத்தை அடுத்து, பள்ளி வாகனங்கள் அனைத்தும் மோட்டூரில் உள்ள தாளாளர் வீட்டில் கொண்டு போய் நிறுத்தப்பட்டு உள்ளது  இதையறிந்த மக்கள் அங்கும் திரண்டு சென்று, தாளாளர் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த பேருந்துகளையும்  அடித்து உடைத்துள்ளனர். ஓர் உயிர் விலை மதிபற்றது தான் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது அதற்க்காக கோபமடைந்து அனைத்தையும் அடித்து நொறுக்கினால் அந்த உயிர் திரும்ப கிடைக்குமா என்ன...? பள்ளி மற்றும் பேருந்துகளை தீ வைத்து கொளுத்தியிருக்கிறார்கள். அசம்பாவிதமாக மீண்டும் தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம் போல் நடந்து அதில் ஒரு உயிர் பலியாகியிருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்...?  இதே போன்று ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மேல் மக்கள் கோபம் கொள்வதில்லை அப்படி கோவப்பட்டிருந்தால் இன்று சுவிஸ் வங்கிகளில் இத்தனை கோடான கோடி பணம் தூங்கி கொண்டிருக்காது.


தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்: காலத்தின் கட்டாயம்


இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுக்கப் போவது தண்ணீர் பிரச்னை தான். இந்த தண்ணீர் பிரச்னையை சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்று, கடந்த பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டிற்கு, 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 56 கோடி ரூபாயில் திட்டம் அமைக்கலாமா என்ற தடுமாற்றம் ஏற்பட் டுள்ளது. என்றாலும் அடுத்த பத்தாண்டு களில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

நதிநீர் இணைப்பு திட்டத்தில், 30 நதிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இணைக்கப்படும். ஆயிரம் கி.மீ., நீளத்திற்கு கால்வாய்கள் அமைத்து, 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் எடுக்க, 11 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தேவைப்படும். இதற்காக 400 புதிய நீர் நிலைகள் கட்டப் படும். நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, எந்த இடத்தின் வழியாக கால்வாய் அமைத் தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது அறியப்பட வேண்டும். அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் மற்றும் குறைவான நீர் கிடைக்கும் இடங்கள் ஆகியவை குறித்து, அடையாளம் காணப்பட வேண்டும். ஆனால், அடையாளம் காணப்பட்ட அதிகமான நீர் கிடைக்கும் இடங்கள் குறித்து, ஒருமுகப்போக்கு இல்லை. உதாரணமாக, மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளில் அளவுக்கு அதிகமான நீர் உள்ளது என்று, மத்திய அரசு கூறிவரும் நிலையில், மாநில அரசுகளான ஒரிசா, ஆந்திரா ஆகியவை குறைவான நீர் தான் செல்கிறது என்று கூறி வருகின்றன. இதுகுறித்து வல்லுனர் களிடையே, விவாதம் நடந்து வருகிறது. ஆனால், நதிநீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து, முறையான ஒப்பந்தங்கள் இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. இதே கதைதான் மற்ற மாநிலங்களுக்கு இடையேயும் நடக்கிறது.

மத்திய அரசு பணியிலிருந்த இன்ஜினியர் கே.எல்.ராவ் என்பவர் தான், கடந்த 1972ம் ஆண்டு, முதன்முதலில் நதிநீர் இணைப்பு குறித்த யோசனை யை வெளியிட்டார். இதன்படி, கங்கை - காவிரி இணைப்பு கால்வாய் அமைக்கப் பட்டால், பாட்னா அருகே வெள்ளமாக பாயும் 60 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் தென் மாநிலங் களின் 150 நாள் நீர் தேவையை சமாளிக்க உதவும் என்று கூறினார். ராவ் கூறிய கங்கை -காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு இணையான "கேர்லேண்ட் கெனால்ஸ்' என்ற திட்டத்தை கேப்டன் டாஸ்டர் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு பரிந் துரைத்தார். இதன்படி, இமயமலையில் பிறக்கும் நதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பிறக்கும் நதிகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில், கால் வாய்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு தேசிய குழு அமைக்கப்பட்டு, கேப்டன் டாஸ்டர் கூறிய நதிநீர் இணைப்பு கால்வாய் அமைப்பதிலுள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டம் சாத்தியமற்றது என்று, பின்னர் நிராகரிக்கப்பட்டது.

மழைக்காலங்களில் வட இந்தியாவில் பாயும் பல நதிகளில், வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதை தடுக்க கால் வாய் அமைப்பதன் மூலம், ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதுடன் கூடுதல் வருவாய்க்கும் வழி ஏற்படும். தொடர்ச்சியாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்காவிட்டால், அதனால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகமாக கிடைக்கும் மழைநீரை சேமித்து வைக்க, தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதனால், இந்தியாவில் வறட்சி ஏற்படும் பெரும்பாலான பகுதிகளின் நீர் தேவையை எளிதாக சமாளிக்க முடியும். திட்டங்களை அமலாக்கும் போது தேவையான நிதி, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பக்கத்து மாநிலங்களுக்கு நீர் அளிக்க வழி கிடைக்கும்.

விவசாய பயன்பாடு அதிகமுள்ள குறிப்பாக, டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு நிலத்தடி நீர் பெருமளவில் உதவுகிறது. பாசனத்திற்கு தேவைப்படும் நீர், குழாய் கிணறு மூலம் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. காவிரி டெல்டா பகுதியிலுள்ள நிலத்தடிநீர் வளம் கிருஷ்ணராஜசாகர் அணையில் கொள்ளளவை விட, அதிகம் என்று யூ.என்.டி.பி., மதிப்பிட் டுள்ளது. ஆற்று சமவெளி பகுதியிலிருந்து, அதிக தொலைவிலுள்ள இடங்களில், நிலத் தடி நீர்வளமே குடிநீர் ஆதாரமாக உள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்துவதால், 10 முதல் 100 மீ வரை நீர் மட்டம் குறைந்து விடுகிறது. இதனால், இப்பகுதிகளில் 300 மீ ஆழம் வரை தண்ணீருக் காக கிணறுகள் தோண்ட வேண்டிய நிலை உள்ளது.

நகர்புறங்களில் தண்ணீர் மட்டம் குறைய, குறைய அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவுடன் குழாய் கிணறு தோண்டப்படுவதால் நிலத்தடிநீர் மட்டம் அதாள பாதாளத் திற்கு செல்வதை தடுக்க முடிவதில்லை. இந்த செயல் தொடரும் போது, நிலத்தடி நீர் கிடைக்காமல் அந்த பகுதியே பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நதிநீர் இணைப்பு மூலம் நீர் பற்றாக்குறையுள்ள இடங் களில் நல்ல நீர் வளம் ஏற்படும். பாசன வசதி அதிகமாவதால், விவசாய நிலங்கள் செழிப் படையும். குடிநீர் பற்றாக்குறை என்பது எங்குமே இருக்காது. நிலத்தடி நீர் மட்டமும் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். பல்வேறு பயன்களை தரும் திட்டம் என்று அனைத்து மட்டத்திலும் அறிந்திருந் தாலும், அதை செயல்படுத்த தொடர்ந்து தயக்கம் காட்டப் பட்டு வருகிறது என்பது தான் உண்மையான நிலை. தேசிய அளவிலும், தென்னிந்திய அளவிலும் நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், மத்திய அரசு இதுவரை அந்த கோரிக்கையை கண்டு கொள்வதாக இல்லை.

இந்நிலையில், தேசிய அளவில் நதிகளை இணைப்பது என்பது, இப்போதைக்கு சாத்தியமல்ல என்பதை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, தமிழகத் திலுள்ள நதிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து, ஏற் கனவே பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. மேட்டூர் அணையின் கீழ் பகுதியில், கட்டளை அணை அருகில் தடுப்பணை அமைத்து, அங்கிருந்து கால்வாய்கள் மூலம் வைகை, குண்டாறு, வைப்பாறு உள்ளிட்ட பல நதிகளை இணைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை, திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி, ஸ்ரீரங்கம்; புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள குளத்தூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், ஆவுடையார் கோவில்; சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, இளையங்குடி, மானாமதுரை; ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவடானை, பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர்; விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, கரியாப்பட்டி, அருப்புக்கோட்டை; தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திக் குளம் ஆகிய பகுதிகள் பயன் அடையும். தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் இல்லாத காரணத்தி னால், மழைக்காலங்களில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நீர் பெற முடியும். மாநிலத்தை வறட்சியின் கோரப்பிடியிலிருந்து காக்க வேறு வழியில்லாமல், தமிழக அரசு இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், வற்றாத ஜீவ நதிகளான கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி போன்ற தென் னிந்திய நதிகளை, தமிழகத்தின் நதிகளோடு இணைத்தால் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர்வளம் குன்றாமல் கிடைக்கும். நீர் வழிச் சாலை திட்டம்: மதுரையைச் சேர்ந்த பொறியாளர் காமராஜ் மற்றும் அவரின் குழுவினர் பல ஆண்டு ஆய்வுக்கு பின்னர் "கங்கை - குமரி தேசிய நீர் வழிச்சாலை திட்டம்' என்ற ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம், தென் மாநிலங்கள் கூடுதல் நீர் பெறுவதுடன், நீர் வழிப் போக்குவரத்தையும் பெற முடியும்.

திட்டத்தின் விவரம்: மூன்று நீர்வழிகளை கொண்டதாக இத்திட்டம் அமைக்கப்பட்டு பிறகு ஒன்றாக இணைக்கப் படும்.

இமயமலை நீர்வழி: இது நான்காயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை -பிரம்மபுத்திரா நதிகளை இணைக்கும்.

மத்திய நீர்வழி: இது ஐந்தாயிரத்து 750 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கங்கை, மகாநதி மற்றும் தபதி ஆகிய நதிகளை இணைக்கிறது.

தென்னக நீர்வழி: இது நான்காயிரத்து 650 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இது கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் கேரள நதிகளை இணைக்கும். இந்த நீர்வழிகள் 120 மீட்டர் அகலமும் 10 மீட்டர் ஆழமும் கொண்டதாக இருக்கும். இந்த மூன்று நீர்வழிகளும் உரிய வழியில் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்படும். நீர் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் நீரை பல்வேறு நதிகளில் பகிர்ந்தளித்தல் போன்ற பணிகளை இந்த நீர்வழி செய்யும். இதன் ஆண்டு கொள்ளளவு, 15 ஆயிரம் டி.எம்.சி., ஆகும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பெரிய நதிகளை இத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் கிளை நதிகளை இணைத்தாலே போதும். இயற்கையான புவியமைப்பு பயன்படுத்தி, இந்த திட்டம் நிறைவேற்றப்படும். கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் மட்டுமே நீர்வழியில் கொண்டு வரப்படும். இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்.

நலம் பல தரும் நதி நீர் இணைப்பு

வெள்ளத்தடுப்பு: மழைக் காலங்களில் ஏற்படும் கட்டுப் படுத்த முடியாத வெள்ளத்தை, இந்த திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். நீர் குறைவாக உள்ள பகுதியை நோக்கி வெள்ளத்தை திருப்பி விடலாம். இதனால் அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் அபாய வெள்ள அளவை குறைக்கலாம். வெள்ளத் தினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, வெள்ள நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் தொகையும் வெகுவாக குறையும்.

குடிநீர்: அனைத்து முக்கிய நகரங்களுக்கும், கிராமங் களுக்கும் போதுமான குடிநீர் வசதியை ஆண்டு முழுவதும் வழங்க முடியும்.

விவசாயம்: 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். இதனால் ஆண்டுக்கு, 50 கோடி டன் உணவு உற்பத்தியை பெற முடியும். ஏற்றுமதி பெருகி, அன்னிய செலாவணி ஈட்ட முடியும்.

மின்சாரம்: நீர் வழிகளில் நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம், 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதன் மூலம் ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதனால் இந்திய தொழில் உற்பத்தியை, 15 மடங்கு உயர்த்த முடியும். அனைத்து நீர்வழிகளிலும் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம், இடமாற்றத்திற்கான மின் இழப்பு குறையும்.

வேலை வாய்ப்பு: இத்திட்டத் திற்கான கட்டுமான பணியின் மூலம், வேலை வாய்ப்பு பெருகும். மேலும், கப்பல் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் விவசாயத்துறை ஆகியவை மூலம் வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும்.

தெலுங்கு கங்கை திட்டம் சிறந்த உதாரணம்: அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத் தில், ஒரு மலையில் ஓடும் நதியிலிருந்து, 720 கி.மீ., தொலைவி லுள்ள சமவெளிக்கு கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, விவசாயம் செய்யப்படுகிறது. துருக்கி நாட்டிலிருந்து சவுதி அரேபியாவிற்கு, கிட்டத்தட்ட 3 ஆயிரம் கி.மீ., தொலைவிற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் எடுத்து வரப்படுகிறது. இத் திட்டத்தால், தங்கள் நாட்டிற்கு பெரும் பாதிப்பு என்ற போதிலும், இஸ்ரேல், ஈராக் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தை அனுமதித்துள்ளன. இந்தியாவில், ஆந்திர அரசு செயல்படுத்தியுள்ள தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம், மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஓடும் கிருஷ்ணா நதியை, தென்பகுதியிலுள்ள வடபெண்ணை ஆற்றுடன் இணைக்கும் வகையில் கால் வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் வழிநெடுக ஒவ்வொன்றும், 10 முதல் 12 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட மூன்று செயற்கை ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குண்டூர், நெல் லூர் மற்றும் கடப்பா மாவட் டங்கள் நல்ல பாசன வசதியை பெற்றுள்ளன. மேலும், இத் திட்டத்தின் கீழ், சென்னை நகருக்கும் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், தேசிய நதிகளை இணைத்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்பதற்கு, தெலுங்கு கங்கை திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.

நீர் வள மேலாண்மை குறைவு: இன்றைய நிலையில், நாட்டின் பல கடைக்கோடி கிராமங் களில் வசிக்கும் மக்களுக்கு, சராசரியாக 2 லிட்டர் குடிநீர் கூட கிடைப்பதில்லை. ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் வசிக்கும் நபருக்கு சராசரியாக தினசரி 5,910 லிட்டர் நீர் கிடைக்கிறது. மற்ற உலக நாடுகளை ஒப் பிடும் போது, இந்தியாவின் நீர்வளம் அவ்வளவு மோசமானதாக இல்லை. சர்வதேச அளவில், சமவெளி பகுதிகளில் சராசரியாக 70 செ.மீ., மழை பெய்கிறது. அதேவேளையில், இந்தியாவில் 117 செ.மீ., மழைபொழிவு உள்ளது. இந்த வகையில் ஆண்டுக்கு கிடைக்கும் 37 கோடி எக்டேர் மீட்டர் மழைநீர் நாட்டின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானது. ஆனால், போதுமான நீர்வள மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தினால், கிடைக்கும் மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலந்து, நாட்டில் நீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. நதிநீர் இணைப்பு திட்டத் தை செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் மழைநீரில் பெரும் பகுதியை பயன் படுத்த முடியும்.

தூங்கும் நீர்வள நிறுவனம்: தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 1982ம் ஆண்டு, தேசிய நீர்வள நிறுவனம் துவக்கப்பட்டது. நதி நீர் இணைப்புக்கான திட்டங்களையும், வரைமுறைகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இந்த அமைப்பின் செயல்பாடு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மத்திய அரசு முழு அளவிலான நிதி உதவியை அளித்து வருகிறது. இந்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் தான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இதுநாள் வரை யார், யார் இதில் இடம் பெற்றுள்ளனர்; அவர்களின் பெயர் மற்றும் தகுதி குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும், மற்ற துறைகளை சார்ந்தவர்களோ, பொதுமக்களின் பிரதிநிதிகளோ யாரும் இந்த அமைப்பில் இதுவரை இடம் பெறவில்லை. அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, இதுவரை எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை. குறிப்பாக, நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து தொழில் நுட்ப அறிக்கை தர வேண்டிய இந்த நிறுவனம் இதுவரை அது சம்பந்தமாக ஒரு அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணைகளால் எப்பவுமே ஆபத்து தான்: சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில், உணவு பற்றாக் குறை அதிகமாக இருந்தது. விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காக, பல கோடி ரூபாய் செலவில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையும், விவசாய நிலமும் கொண்ட நாடுகளுக்கு அணைகள் ஒத்துவராது. நதிகளை இணைப்பதே சிறந்த முறையாகும் என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றும் கருதப்படுகிறது. பொதுவாக அணைகள் கட்டுவதால், புவியியல் ரீதியில் பெரும் பாதிப்புக்கள் உண்டாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு தான் ஸ்வீடன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அணைகள் கட்ட, சட்ட ரீதியான தடை விதிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், புதிய அணைகளை கட்டுவதை காட்டிலும், வட மாநில நதிகளை, தென் இந்திய நதிகளோடு இணைப்பது ஒன்றே, இந்தியாவின் விவசாய மேம்பாட்டிற்கும், வெள்ள சேத தடுப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும் என்று நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய மின் சக்தி-தேவை தொலை நோக்கு பார்வை


இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர் தெரிவிக்கின்றனர்.


நேஷனல் சோலார் மிஷன் : கடந்த ஆண்டு, நவம்பரில், ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம், மூன்று கட்டமாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக, 2010 - 2013 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கில், தமிழகம் தனக்குரிய பங்கினை பெற, சூரியஒளி மின் உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பு வோருக்கு, தடையாக உள்ள அம்சங்களை நீக்க தமிழக அரசு முன் வர வேண்டும். ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் கொள்கையின்படி, தேசிய அனல் மின் உற்பத்தி கழக, வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.பி.டி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிமிடெட்) எனும் அமைப்புதான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு, விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல் படுகிறது.


இந்த அமைப்புதான், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, அவர்களிடம், 25 ஆண்டு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும்.தற்போது, மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பங்கு தெரிவிக்கப்படவில்லை.சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியாரிடம் பெற்றுக் கொள்ளும் என்.வி.வி.என்., அதை தன்னிடம் உள்ள, ஒதுக்கப்படாத அனல் மின்சார தொகுப்பிலிருந்து மின்சாரத்தை இணைத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு யூனிட்டுக்கு 5.50 ரூபாய் விலையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. 5.50 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் பெற்றுக் கொள்வது எளிதானது என்பதால், மாநில அரசுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கண்டிப்பாக ஆர்வம் காட்டும்.


3 சதவீத கட்டாயம் : ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.


கோபன்ஹேகன் சுற்றுச்சூழல் மாநாட்டில் தனி ஆவர்த்தனம் பாடிவிட்டு வந்துள்ள இந்தியா, சில கட்டுப் பாடுகளை, உறுதியாக எடுக்க வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதன்படி 2020ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும் மொத்த மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின் படி, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் இன்னும் கோரப்படவில்லை. எனினும் விண்ணப்ப தாரர்கள் தகுதி நிர்ணயித்து, என்.வி.வி.என்., பரிந்துரை செய்துள்ளது.


அதன்படி, முதலாவதாக, சூரியஒளி மின் திட்டத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 33 கே.வி., திறன் கொண்ட மின்கிரிடுகள் மூலமாகத் தான் கொண்டு செல்ல வேண்டும். இரண்டாவதாக, விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது அதன் இயக்குனர்களின் மதிப்பு (நெட் வொர்த்), ஒரு மெகா வாட்டுக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் கொண்டிருக்க வேண்டும்.மூன்றாவதாக, "சோலார் போட்டோ வோல்டிக்' முறையில் மின் உற்பத்தி செய்ய இந்தியாவில் தயாரிக்கப்படும் பேனல் களையே உபயோகிக்க வேண்டும்.இவற்றில், முதல் மற்றும் மூன்றாவது விதிமுறைகள் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு முட்டுக்கட்டை களாக அமைந்துள்ளன.


தமிழக அரசு செய்யுமா?தமிழகத்தில், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான் சூரிய ஒளி மின் உற்பத் திக்கு ஏற்ற மாவட்டங்கள் என்று கருதப் படுகின்றன.ஒரு மெ.வா., சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க, குறைந்தது 4.5 ஏக்கர் தேவைப்படும். நகருக்கு வெளியே கிராமங்களில்தான் இந்த இடம் கிடைக்கும். அங்கு தான் இட மதிப்பு குறைவாக இருப்பதால், திட்டம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில், சில இடங்களைத் தவிர, கிராமப்பகுதியில் 33 கே.வி., திறன் கொண்ட மின் கிரிடுகளோ அல்லது அதற்கேற்ற துணை மின்நிலையங்களோ இல்லை. இவை அதிகமாக, 11 (22/11) அல்லது 22 கே.வி., (110/22) துணை மின் நிலையங்களில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் கிரிடுகளை, 110/33 கே.வி., அல்லது அதற்கு அதிக திறன் கொண்ட துணை மின் நிலையங்களாக மாற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கூறிய திறன் கொண்ட ஒரு துணை மின் நிலையம் கூட இல்லை. இவ்விஷயத்தை, போர்க்கால அடிப்படையில், செய்தால்தான் தேசிய திட்டத் தின் பயனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


மற்ற மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், குறிப்பாக, குஜராத், கர்நாடகா மாநிலங் களை சேர்ந்த மின் உயர் அதிகாரிகள், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் அதிகப் பங்குகளை கொண்டு வர டில்லியில் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்துறை உயர் அதிகாரிகள் அதிக ஆர்வம் கொண்டிருந் தாலும், தமிழக அரசு சூரிய ஒளி மின் சக்தி குறித்து, கொள்கை ரீதியாக தெளிவான முடிவை இன்னும் எடுக்காததால், தமிழக அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.காற்றாலை திட்டத்தில், பல மட்டத்தில் அதிகாரிகள் உதவி செய்வதில்லை. காற்றாலையிலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் கிரிடுகளை உற்பத்தி யாளர்களே அமைக்க வேண்டும் என்றும், கட்டுமான வளர்ச்சிக் கட்டணம் என்ற தொகையை கட்டவேண்டும் என்றும் மின் வாரியம் வலியுறுத்தி வந்தது.


இதுதொடர்பான வழக்கில் மின்சாரத் துறைக்கு சாதக மாக தீர்ப்பானது. இதன் பலனாக, தமிழக மின் வாரியத்துக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. அதே போல், சூரிய ஒளி மின் உற்பத்தி யாளர்கள், மின்கிரிடுகள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மின் துறை யிலுள்ள சில அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் மின் வாரியம் செலவு செய்ய வேண்டாம் என்று பார்க் கிறார்களே தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க காற்றாலையை விட மூன்று பங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி யுள்ளது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். நீண்டகால முதலீடு கொண்ட இத் தொழிலில், நிறைய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அதிகாரிகள் திட்டமிட வேண்டும். 365 நாட்களிலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சூரிய ஒளி மின் திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.


அத்துடன், சூரிய ஒளி மின் திட்டங்கள் மட்டுமே, அனைத்துப் பகுதியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும் அமைக்க முடியாது. பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் சூரிய ஒளி மின் திட்டத்தில் மட்டுமே சாத்தியம். எனவே, எதிர்காலத்தில் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளுமே, சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப் புள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் மின் வினியோகத்தில், உள்ள இழப்பை தவிர்க்க முடியும். தமிழகத்தில் பற்றாக்குறை 10-12 சதவீதமும், மின் வினியோக இழப்பு 18-20 சதவீதமும் உள்ளது. காற்றாலைகளைப்போல் மின் கிரிடுகளை முதலீட்டாளர்களே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால், இந்த திட்டம் ஆரம்பித்ததன் நோக்கமே போய்விடும். அத்துடன், பிற திட்டங்களைப் போல் இத்திட்டமும், வெற்றியடையாமல் வெறும் காகிதத்திலேயே முடிந்துவிடும்.


சூரிய ஒளி மின்உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, துணை மின் நிலையங்களின் மின் திறனை, 33 கே.வி.,யாக திறன் உயர்த்த தமிழக அரசு உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகளைப் போல், என்.வி. வி.என் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று தமிழக அரசும் கோரிக்கை வைக்க வேண்டும்.ஏற்கனவே தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழகத்தில் 100 மெ.வா. சூரிய ஒளி மின் உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தார். கடந்த வாரம், தமிழக அரசின் சார்பாக மின்துறை செயலாளர், தேசிய சோலார் மிஷனில் தமிழகத்துக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கடிதம் எழுதி யுள்ளார். ஆகவே சூரிய ஒளி மின் உற்பத்தி அவசியம் என்று தமிழக அரசு கருதுகிறது. அது பாராட்டுக்குரியது. அதற்கான அடிப்படை கட்டுமான தேவையை பூர்த்தி செய்யும் பணியிலும், காற்றாலைக்கு சில அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை போல்இதற்கும் போடுவதை தவிர்க்கவும், தமிழக அரசு, முழுமூச்சில் முயற்சி செய்ய வேண்டும்.


இல்லாவிட்டால், நேஷனல் சோலார் மிஷனை விடுத்து, குஜராத் போல், தமிழக அரசும், தங்களுக்கென்ற தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்முதல் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழக மின்வாரியமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைந்த கதையாய், இலவசமாக கிடைக்கும், சூரிய ஒளியை பயன்படுத் தாமல், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அவதிப்படக்கூடாது. தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய தமிழகத்தை ஒளிரச் செய்ய தமிழக அரசும், அதிகாரிகளும் உடனே களத்தில் இறங்க வேண்டும்.


கோடைகாலம்... வரப்போகிறது தேர்தல்...:நம் வாக்காளர்கள், கடைசி நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் ஆட்சியை மாற்றி விடுவார்கள் என்பது நாம் பழைய தேர்தல் களிலிருந்து படித்த பாடம். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் கோடை காலத் தில் தான் வரப்போகிறது. அப்படியானால், மின்வெட்டின் போது, மக்கள் ஓட்டுப் போடப்போகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.கோடை காலத்தில் 10 ரூபாய் அதிகம் கொடுத்து, டீசல் மின் உற்பத்தியாளர் களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று, பழைய பாணியில் அதிகாரிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது சமயத்தில் வீடு களுக்கு மட்டுமே மின்சாரம் வினியோகிக்க முடியும்.


தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடியாது.கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, தொழில் மாவட்டங்களான கரூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதி களில் தி.மு.க.,வுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு வர இருக்கும் தேர்தலுக்குள் பெரிய மின் திட்டத்தை கொண்டு வருவது கடினம். எந்த ஒரு மின்திட்டத்தையும் அமைக்க குறைந்தது 5-7 ஆண்டுகள் ஆகும். ஆனால் சூரிய ஒளி மின்திட்டத்தை மட்டுமே ஓர் ஆண்டுக்குள் அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பிற மாநிலங்களைப்போல் தமிழகமும், 13-16 ரூபாய் வரை அளித்து 10 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தால், ஒரு பஞ்சாயத்துக்கு 2 மெ.வா., வீதம் 600 மெ.வா., உற்பத்தி செய்யலாம். இல்லா விட்டால் தேர்தல் நேரத்தில் எழும் மின் வெட்டுப் பிரச்னையின் போது, வாக்காளர் களின் கோபத்தை சந்திக்க நேரிடும். அண்ணா சாலையில் சட்டசபை வளாகத்தை கட்டியதாலோ, அண்ணா பல்கலை., நூலகம் அமைத்ததையோ மக்கள் சாதனையாக ஏற்க மாட்டார்கள். அதை கடமையாகவே கருதுவார்கள். மின் பற்றாக் குறையை உணர்ந்து, உடனடியாக நிறுவக் கூடிய சூரிய ஒளி மின் திட்டத்துக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.


எது சிக்கனம்...சிந்திக்குமா அரசு...: தமிழகத்தில் இன்னும் இரு ஆண்டு களில், அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் 3 ஆயிரம் மெ.வா., மின் உற்பத்தி செய்ய, மின் வாரிய அதிகாரிகளும் நிதித்துறை அதிகாரி களும் திட்டமிட்டு வருவதால், சூரிய ஒளி மின் திட்டத்துக்கு உள்கட்டமைப்புக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள்.இந்த மின் உற்பத்தியால், தமிழகத்தில் மின் தேவையை சமாளிக்க முடியும் என்று கருதும் அவர்கள், சூரிய ஒளி மின் திட்ட உள்கட்டமைப்புப் பணிகளை மின்சார வாரியம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களின் கணக்குப்படி, 4 ரூபாய்க்கு அனல் மின் நிலையம் மூலம் ஒரு யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 3 ஆயிரம் மெ.வா., மின்சாரத்துக்கு இதுவரை அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும். அதுமட்டுமல்ல, இந்த கணக்கில் வராத செலவினங்களும் உண்டு. இம்மின்சாரத்தை கொண்டு செல்லும் பாதையில் உள்ள கிரிடு மற்றும் துணை மின் நிலைய திறன் கூட்டுவதற்கான செலவை உற்பத்தியில் சேர்ப்பதில்லை. இவையெல்லாம் அரசின் பட்ஜெட் செலவினங்களில் மட்டுமே வருகின்றன.


மேலும், தற்போது கிடைக்கும், நிலக்கரி, தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுரங் கங்கள் அதிக விலை கொடுப்பவர்களுக்கு நிலக்கரியை விற்பதால், நமக்கு தொடர்ந்து நிலக்கரி கிடைப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதனால் தேவைக்கு அதிகமாக, நிலக்கரியை சேமித்து வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த செலவினங்கள் எல்லாம் அவர்கள் உற்பத்தி செலவில் கணக்கில் சேர்த்துப் பார்ப்பதில்லை.மேலும், தரமான நிலக்கரி இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. நிலைமை இவ்வாறு இருக்க, முதலீடு செய்ய வருபவர்களை பிற மாநிலங்கள் போல், ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தனியாரே முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய வழிவகுப் பதே எந்த புத்திசாலி அரசும் செய்யும் பணியாகும்.


தனி வழியில் செல்லுமா தமிழகம்...:சோலார் நேஷனல் மிஷன் திட்டத்தின் படி, தற்போது 2010-13ம் ஆண்டுக்குள் 1000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 500 மெ.வா., சோலார் போட்டோ வோல்டிக் வழியா கவும், 500 மெ.வா., சோலார் தெர்மல் வழியா கவும் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.உலக அளவில்,சூரிய ஒளி மின் உற்பத்தியில் சோலார் தெர்மல் வழி உற்பத்தி 1 சதவீதம் மட்டுமே. இதற்கு ஏன் 50 சதவீத பகுதியை ஒதுக்கீடு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதனால்தான் என்னவோ, குஜராத் அரசு அவர்களுக்கு என்று தனியாக திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். சூரிய ஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி செய்பவர்களுக்கு குஜராத் அரசு நேரடியாக ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுக்கு மின்சாரம் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.தமிழக அரசும் இதேபோல் ஒரு திட்டத்தை வகுத்தால்தான், இலவசமாக கிடைக்கும் சக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையில் (டெடா) இவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் பல சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி அறிந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை.


இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கி இன்னும் 2 மாதம் கூட ஆகவில்லை. இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்யமுடியுமா? இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் சோலார் பேனல்கள் எத்தனை ஆண்டு உழைக்கும். தேய்மானத் தால் எத்தனை சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் இந்திய சூழ்நிலையில் யாரும் அறிந்திருக்கவில்லை. இதைப்பற்றி அறியாமல், அரசு தருகிறது என்று இறங்கினால், கோடிக்கணக்கில் செய்யும் முதலீடு கேள்விக்குறி ஆகிவிடும். இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அனுபவம் உள்ளவர்கள், டெக்னீசியன் உள்ளிட்டோர் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர். வெறும் பத்திரிகை செய்தியை நம்பி இறங்குவோருக்கு இத்துறை பெரிய சவாலாக அமையும். புதிதாக துவங்க விரும்பும் நிறுவனங்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து துவங்குவதே அறிவுப்பூர்வமான செயல்.

என்று தணியும் இந்த அடிமையின் மோகம்


‘உலகில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக யாரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. வீட்டு வேலைக்காரி என்ற பெயரில் பெண்கள் அடிமைகள் போல் நடத்தப்படும் அவலம் நீடிக்கும் வரை’’ & உலகின் உயர் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை ஆதங்கத்தோடு சொன்ன கருத்து இது. பெண்ணின் சிறப்பைச் சொல்ல எத்தனையோ பொன்மொழிகள். அத்தனைக்கும் ஆயுள் உண்டு. ஆனால், அடிமைகளை விட கொடுமையாய், வீட்டு வேலை என்ற பெயரில் சிறைபட்டு கிடக்கும் பெண்களின் வாழ்க்கைதான் கேள்விக்குறியாக வளைந்து நிற்கிறது. இந்திய மக்கள் தொகையில் 3 கோடி பெண்கள் அடுத்தவர் வீடுகளில் வேலைக்காரர்களாக வலம் வருகிறார்கள். அதில் தமிழகப் பெண்கள் 18&20 லட்சம். தலைநகர் சென்னையில் 8 லட்சம் என்பது தற்போதைய தகவல்கள். ஆனால், எந்த அமைப்பிலும் இல்லாமல், அப்படியொரு இடம் இருப்பதே தெரியாமல் பழைய சோற்றுக்கும், பழைய துணிமணிக்கும் பல ஊர்களில், பல வீடுகளில் பெண்கள் வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை
அதிகமாகலாம். அவலம் மாறுமா?
‘‘வீட்டு வேலை செய்வோர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த அடிமைத்தனம் இங்குமட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது. வீடுகளில் வேலை பார்க்கும் பெண்களை மட்டுமல்ல; ஆண்களையும் அடிப்பதும் உதைப்பதும் நடக்கிறது. வெளியேற முடியாமல் சிறை வைப்பது, பிறரிடம் பேசுவதற்கு அனுமதி மறுப்பது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பாலியல் தொந்தரவு போன்ற உடல்ரீதியான பாதிப்புகளுக்கு பெண்கள் இலக்காகின்றனர்’’ என்று ஐ.நா. சிறப்பு அதிகாரி குல்னரா சாகினியான் கூறியிருக்கிறார்.

வீட்டு வேலை செய்யும் பெண்கள் எந்த ஒரு சிறிய விஷயத்திற்கும் எஜமானவர்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம். குடும்ப வறுமை, கடன் சுமை, வேலை போய் விடுமோ என்ற பயம் போன்ற காரணங்களால், இப்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை வெளியில் கூறுவதில்லை. பெரும்பாலும் இவர்கள் வெளியூர்களில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வாழ வழி தேடி வந்தவர்கள். எனவே வாயிருந்தும் ஊமைகளாக வாழக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு தரப்பு பெண்களின் வேதனை வேறு விதமானது. வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைமைதான் அது. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகபட்ச கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்பதும் ஐ.நா.வின் கவலைகளில் ஒன்று. மொழி தெரியாது, வெளிநாட்டு சட்ட திட்டங்கள் புரியாது. இந்த காரணங்களால் படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. பாஸ்போர்ட்களை எஜமானர்கள் கைப்பற்றி வைத்துக் கெள்வதால், அவர்களால் நாடு திரும்ப முடியாத பரிதாப நிலைமையிலும் சிக்கி தவிக்கின்றனர்.


படித்ததும், படிக்காததும்...

வீட்டு வேலை செய்பவர்கள் படிக்காதவர்களாக இருந்தால், நன்றாக வேலை வாங்க முடியும். எதிர்த்து பேச மாட்டார்கள், மரியாதை எதிர்பார்க்க மாட்டார்கள், சொல்வதை அப்படியே செய்வார்கள் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. அதிகம் படித்த, சம்பாதிக்கும் தம்பதிகள், தங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். காரணம் படித்தவர்களாக இருந்தால், குழந்தைகள் பராமரிப்புக்கு உதவும் என்று நினைக்கின்றனர்.

ஒன்றா... இரண்டா...

வீடுகளில் வேலை பார்க்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. நிறைய சம்பவங்கள் அதற்கு உதாரணங்கள். அவற்றில் சில...
ஈரோட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சார்பில் நடத்தப்படும் இல்லத்தில் இருந்து ஒரு பெண், டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடந்த பாலியல் தொந்தரவில் அப்பெண் தாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து அனாதையாக்கி விட்டனர் அக்குடும்பத்தினர்.
சேலத்தில் நடந்த கொடுமை இது. 12 வயது சிறுமி மீது திருட்டு புகார். 20 பவுன் நகையை திருடியதாக அடித்து உதைத்தனர். அதில் அச்சிறுமி பரிதாபமாக இறந்து போனாள். ஆனால், உண்மையில் திருடியது அந்த வீட்டு உறவினர்.
மதுரையிலும் இதேபோன்ற ஒரு சம்பவம். வீட்டு வேலை பார்த்த பெண்ணையும், அவரது மகனையும் திருட்டுப் புகாரில் போலீஸ் இழுத்துச் சென்றது. திருட்டை ஒப்புக்கொள்ள சொல்லி கடுமையாக தாக்கினர். விரல் நகங்களை பிடுங்கி ரத்தம் சொட்ட சொட்ட விசாரணை நடத்தினர். கடைசியில் நிரபராதிகள் என்பது தெரிந்தது.
வறுமையில் வாடிய ஒரு பெண்மணியின் 8 வயது சிறுமியை வளர்ப்பதாக கூறி அழைத்து வந்தனர். 3ம் வகுப்பு படிக்க வேண்டிய அக்குழந்தையை வீட்டு வேலையில் ஈடுபடுத்தினர். ஆனால், நரபலி கொடுக்க அக்குழந்தையை அழைத்து வந்த விஷயம் தெரிந்ததும் போடி நகரமே ஆடிப்போனது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்த கொடுமை. கேரளாவிலும் அதிகம். ஒரு வீட்டில் வேலை பாத்த 12 வயது சிறுமி, டிவி பார்த்தால் என்பதற்காக எஜமானி அம்மாவால் தண்டிக்கப்பட்டாள். எப்படி? கொதிக்கும் தண்ணீரை முகத்தில் ஊற்றி...
கேரளாவுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் தமிழக குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 700&800 குழந்தைகள் அனுப்பப்படுகின்றனர்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற கணக்கெடுப்பை தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் நடத்தியது. கடந்த 2005ம் ஆண்டு கணக்குப்படி மொத்தம் 18 லட்சத்து 29 ஆயிரம் பேர் உள்ளனர்.
மாவட்டவாரியாக...
கன்னியாகுமரி 50,000
திருநெல்வேலி 1,10,000
தூத்துக்குடி 60,000
மதுரை 1,25,000
விருதுநகர் 35,000
ராமநாதபுரம் 30,000
சிவகங்கை 15,000
தேனி 25,000
திண்டுக்கல் 70,000
திருச்சி 1,10,000
தஞ்சாவூர் 30,000
புதுக்கோட்டை 32,000
சேலம் 70,000
கிருஷ்ணகிரி 43,000
விழுப்புரம் 42,000
வேலூர் 50,000
சென்னை 6,60,000
பெரம்பலூர் 25,000
ஈரோடு 30,000
கோவை 70,000
திருவள்ளூர் 25,000
காஞ்சிபுரம் 65,000
நாமக்கல் 25,000
திருப்பூர் 20,000
நாகை 15,000
திருவாரூர் 15,000
கரூர் 17,000

இது 5 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கு. இப்போது, அதுவும் பொருளாதார மந்தநிலையால் கட்டிடத் தொழில் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்ட பின்னர், வீட்டு வேலை செய்யும் பெண்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.


ஒரு மணி நேரத்திற்கு ரூ.30


வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடின. அதன் பலனாக முதலில் 1999ல் தமிழ்நாடு உடல் உழைப்போர் நலச் சட்டத்தில் வீட்டு வேலையும் சேர்க்கப்பட்டது. 2005ல் சங்கம் அமைக்க சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்தது. 2007ல் தனி நலவாரியம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது அமலுக்கு வரும்போது வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 கூலி கிடைக்கும். தினசரி சம்பளம் என்றால் ரூ.200.

முக்கால்வாசி
பெண்கள்

வீட்டு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிவரங்கள் விதவிதமான கணக்குகளை தெரிவிக்கின்றனர். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்கள்தான் அதிகளவில் வீட்டு வேலை செய்பவர்களாக இருந்துள்ளனர். இப்போது வீட்டு வேலை செய்பவர்களில் 78 சதவீதம் பேர் நகர்புறத்தைச் சேர்ந்த பெண்கள். இவர்கள் நகர்புறத்தில் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். நாடு முழுவதும் நடைபெறும் நகரமயமாக்கல் நடவடிக்கைகளால் முதலில் பாதிக்கப்படுவது வீட்டு வேலை செய்யும் பெண்கள்தான்.

நாய் பிஸ்கட்டை தின்றதால்...


தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கிளாரா கூறியதாவது:
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னமும் மாதம் 75 ரூபாய்க்கு வீட்டு வேலை செய்கின்றனர். மதுரையில் 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு கொத்தடிமை போல் வேலை செய்கிறார்கள். ராமநாதபுரம் அருகே தோத்தூரணி என்ற பகுதியில் 350 குடும்பங்களை சேர்ந்த பெண்கள் எல்லாருக்குமே வீட்டு வேலை தான் முக்கியத் தொழில். தூத்துக்குடியில் பசி காரணமாக, நாய் பிஸ்கட்டை தின்று விட்டதாக கூறி, வீட்டில் வேலை பார்த்த மூன்று பேரை வேலையை விட்டே நீக்கி விட்டனர்.
தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும்போது வீடுகளில் வேலை பார்ப்பவர்களை ஏதாவது பழி சுமத்தி அனுப்பி விடுவார்கள். போனஸ் கேட்பார்கள் என்பதற்காக இப்படி செய்கின்றனர். சில வீடுகளில் பழைய சேலையில், தையல் போடப்பட்டுள்ள ஓரத்தை வெட்டி விட்டு, புது துணியாக கொடுக்கின்றனர்.
தீண்டாமை கொடுமையும் உண்டு. வேலைக்கார பெண்களுக்கென தனி தட்டு, டம்ளர் வைத்திருக்கிறார்கள்.
வீட்டு வேலை செய்பவர்களில் 80 சதவீதம் படிக்காதவர்கள். கணவர்கள் குடிகாரர்களாக இருப்பதாலும், நிறைய பிள்ளைகள் உள்ளதாலும், வறுமையில் சிக்கி வேலைக்கு வருகிறார்கள். சுடச்சுட சமையலுக்கு உதவினாலும், அவர்களுக்கு கிடைப்பது பழைய சோறும், ஊசிப் போன குழம்பும் தான்.
சாப்பாடு விஷயத்தில் சில பேர் மிகவும் கொடுமையாக நடப்பார்கள். பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல வேலை ஆட்களை அனுப்புவார்கள். அந்த குழந்தை சாப்பிடாமல் மீதி வைத்து விடும். அதைக் கூட அந்த பெண் சாப்பிடக் கூடாதாம். அதனால், மீதி உணவில் மண்ணை அள்ளிப் போட்டு விடும்படி குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறார்கள். சாதிக் கொடுமை தான் இதற்கு காரணம் என்றார்.


ரகசிய வீட்டுக்காரராக ஆசை


வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் கொடுமைக்கு கொஞ்சமும் குறைவில்லை. வறுமையில் இருப்பவர்களை பணம், பொருள் கொடுத்து மடக்கி விடலாம் என்று சில வீட்டுக்காரர்கள் நினைக்கிறார்கள். வறுமை, மிரட்டல் காரணமாக சிலர் படிகிறார்கள். மறுப்பவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி விரட்டுவதும் நடக்கிறது.
வழிக்கு வருகிற பெண்களின் ரகசிய வீட்டுக்காரர்களாக துடிப்பவர்களில் அரசியல்வாதிகளும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு சென்னை முழுவதும் சுவரொட்டி ஒன்று பளிச்சிட்டது. உயரம் மிகவும் குறைவு என்பதால், வீட்டு வேலைக்கு சென்றார் ஒரு பெண். அது அரசியல்வாதி வீடு. குள்ளப் பெண் என்றும் பாராமல் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டார். கட்டிக்கொள்கிறேன் என்று கூறி 2 முறை கலைக்கவும் வைத்தார். கடைசியில் பிரச்னை வெடித்த போது அந்தப் பெண் அவமானப்பட்டதுதான் மிச்சம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்த அரசியல்வாதியின் செல்வாக்குதான் வெற்றிப்பெற்றது.

இதிலுமா சாதி?

சிலர், வீட்டு வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதிலும் சமையல் செய்வதாக இருந்தால், சாதி தான் வேலையை உறுதி செய்கிறது. ஊதிய விஷயத்திலும் சாதி பார்ப்பது இன்றைய நாகரீக உலகில் இன்னொரு ஆச்சர்யம். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களை தங்கள் வீட்டு வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ள தயங்குபவர்கள், அவர்கள் மதம் மாறியிருந்தால் சாதியை கண்டுக்கொள்வதில்லை. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் கீதா கூறுகையில், ‘‘வீட்டு வேலை பார்ப்பவர்கள் மூன்று வகை. பகுதி நேரமாக பார்ப்பவர்கள், முழுநேரமாக பார்ப்பவர்கள், கொத்தடிமைகளாக இருப்பவர்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் தலித் பெண்கள். 10% பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இளம்பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் தான் இந்த வேலைக்கு வருகின்றனர்,’’ என்றார்.

கருத்து சுதந்திரத்திற்க்கு கிடைத்த வெற்றி




குஷ்புவுக்கு மட்டுமல்ல. கருத்துச் சுதந்திரத்தைப் போற்றும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் நீதி கிடைத்திருக்கிறது. திருமணம் செய்தோ செய்யாமலோ சேர்ந்து வாழ்வது அவரவர் விருப்பம். ஆனால் உடலுறவு கொள்ளும் எல்லாரும் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள் என்பதுதான் குஷ்பு ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்த கருத்தின் சாராம்சம்.



இந்தக் கருத்தைத் தொடர்ந்து பல விதமாகத் திரித்தும் குஷ்பு அடுத்தடுத்து சொன்னவற்றையும் திரித்தும் அவ்ருக்கெதிராக தமிழ்க் கலாசாரக் காவலர்களாகத் தங்களைத் தாங்களே தமிழ் மக்கள் மீது திணித்துக் கொண்ட சில சந்தர்ப்பவாதிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். தமிழ் நாட்டின் வெவ்வேறு ஊர்களில் மொத்தமாக குஷ்பு மீது 23 வழக்குகளைத் தொடுத்தார்கள்.



இந்த அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கும் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் தீபக் வர்மா, பி.எஸ் சௌஹான் ஆகியோர் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் - சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்வது கிரிமினல் குற்றமாகாது. குஷ்பு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பற்றி சொன்னவை சர்ச்சையை ஏற்படுத்தலாம். அந்தக் கருத்தை ஏற்காதவர்கள் அநேகர் இருக்கலாம். ஏற்கிறவர்களும் இருக்கிறார்கள். திருமணம், குடும்பம், ஒழுக்கம் பற்றிய கருத்துகள் நிலையானவை அல்ல.மாறக்கூடியவை. நபருக்கு நபர் வேறுபடக் கூடியவை. ஆனால் கருத்துகளைச் சொல்வது குற்றமாகாது. அதற்கான கருத்துச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு.



இந்தியா டுடே தமிழ் இதழின் செக்ஸ் பழக்கங்கள் பற்றிய சர்வே சிறப்பிதழுக்கு அளித்த பேட்டியில் குஷ்பு சொன்னது என்ன ?



“ என்னைப் பொறுத்த வரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல. அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய் பிரெண்டை மாற்றிக் கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை...ஒரு பெண் தன் பாய் பிரெண்டைப் பற்றி உறுதியாக் இருக்கும்போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே வெளியே போகலாம்... நான் காதலித்த நபரைத் திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம்.. ” என்பதுதான் குஷ்பு சொன்னவை. யாரானாலும் பாதுகாப்பான செக்ஸ் அவசியம் என்பதுதான் குஷ்பு மேற்கொண்டு வலியுறுத்திய கருத்து. இப்போதெல்லாம் படித்த ஆண்கள் யாரும் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண் இதற்கு முன்பு உறவில் ஈடுபடாத வர்ஜினாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பது குஷ்புவின் இன்னொரு கருத்து.



இதுபற்றி தினந்தந்தி கேட்ட கேள்விக்கு, “இன்றைக்கு திருமணத்துக்கு முன்னால் உறவு வைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று குஷ்பு சொன்னார்.



இந்தக் கருத்துகள் திரிக்கப்பட்டன. .



ஐந்து வருடங்களுக்கு முன்னால் குஷ்புவுக்கு எதிராகவும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகவும் நடந்த அராஜகங்களை நினைவுபடுத்திக் கொள்வது நம் எல்லாருக்கும் நல்லது. ஏனென்றால் நம் சமூகத்தின் மீதே செலக்டிவ் அம்னீஷியா என்ற நோய்க் கிருமியைத் திணிப்பது பொது வாழ்க்கையில் அரசியலில் இருப்பவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு.



அப்போது குஷ்புவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் சன் டி.வி, தமிழ் முரசு ஏடு, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், சீமான், தங்கர் பச்சான்,பழ. கருப்பையா முதலானோர்.



ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு பல பேருடன் உறவு வைக்கலாம் என்று குஷ்பு சொல்லியதாகப் பொய்யாக எழுதிக் கண்டித்தார் பழ. கருப்பையா. சன்.டி.வியும் தமிழ் முரசும் குஷ்புவுக்கு எதிராக ராமதாஸ், திருமாவளவன் கட்சியினர் நடத்திய போராட்டங்களைப் பிரும்மாண்டமாக ஆக்கிக் காட்டி தொடர்பிரசாரம் செய்தன.



குஷ்பு வீட்டுக்கு திருமாவளவன் கட்சியினர் கழுதை ஊர்வலம் நடத்தினார்கள். நடிகர் சங்கத்தின் முன் ஆர்ப்பாட்டம் என்று சொல்லி துடைப்பக் கட்டைகளை சிலர் வீசினார்கள். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் கூட சாதுர்மாஸ்ய விரதத்தின்போது கோர்ட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்னால் ஒப்புக் கொள்கிற உள்ளூர் கோர்ட்டுகள், குஷ்புவுக்கு பிடி வாரண்ட் அனுப்பின.



நடந்ததெல்லாம் தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்று சப்பைக்கட்டு கட்டினார் திருமாவளவன். நாங்கள் நேரடியாக இறங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா என்று ராமதாசும் திருமாவளவனும் கேட்டார்கள்.



தன்னெழுச்சியாகப் போராடுகிறவர்களுக்கு எங்கிருந்து கழுதைகளைத் திரட்டிக் கொண்டு வருவது என்றெல்லாம் தெரியுமா என்ன ? கழுதையும் துடைப்பக்கட்டையும் சலவை தொழிலாளர்களும் துப்புரவுத்தொழிலாளர்களும் உபயோகிப்பவை. இவற்றை ஒருவரை இழிவுபடுத்துவதற்கான குறியீடுகளாகப் பயன்படுத்துவது உண்மையில் அந்தத் தொழில்களையும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்துவதேயாகும். மேலவளவில் தலித்தைக் கொலை செய்தவர் வீட்டுக்கோ திண்னியத்தில் தலித் வாயில் மலம் திணித்தவர் வீட்டுக்கோ போய் ஆர்ப்பாட்டம் நடத்தாத தலித் காவலர்கள் குஷ்பு வீட்டுக்குப் போனார்கள். இவர்கள் யாரும் குஷ்பு பேட்டியை வெளியிட்ட பத்திரிகை வாசலுக்குப் போகவில்லை.



குஷ்பு பேச்சால் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்ன தங்கர் பச்சான் தனக்கு முன்னர் நேர்ந்த அவமானம் இப்போது எல்லா தமிழர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது என்றார். இவருக்கு ஏற்பட்ட அவமானம் என்ன ? ஒரு நடிகையுடனும் சிகை அலங்கரிப்பாளருடனும் சமபளம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காசுக்கு வேலை செய்யும் நடிகையும் விபசாரம்தான் செய்கிறார் என்று பொருள்பட சொன்னதற்கு நடிகைகள் குஷ்பு சுஹாசினி எல்லாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர் மன்னிப்பு கேட்க வேண்டி வந்தது. இதைத்தான் அவமானம் என்றார்.



குஷ்புவைத் தமிழ் நாட்டை விட்டு வெளியே போ என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கண்டித்துவிட்டு தமிழர்கள் சார்பாக குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட சுஹாசினியை அவர் தமிழச்சியே அல்ல, கைபர் கணவாய் வழியே வந்தவர் என்ற கருத்தை உதிர்த்தார் சீமான். இவர் அப்போது அதே கணவாய் வழியே வந்த மாதவனைத் தன் படங்களில் நடிக்க வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்ததை செலக்டிவ் அம்னீஷியாவில் தமிழர்கள் மறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான்.



குஷ்புவை தாங்கள் முஸ்லிமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். குஷ்புவுக்கு நிகராக பாலியல் விஷயங்களில் கருத்து தெரிவிக்கும் படைப்பாளி கவிஞர் சல்மா முஸ்லிமா இல்லையா என்று அக்மார்க் முத்திரை எதையும் த.மு.மு.க அறிவிக்கவில்லை. நடிகர் சங்கத்திலிருந்து சரத் குமார் சுஹாசினியிடம் விளக்கம் கேட்கப் போவதாக அறிவித்தார்.



ஊர் ஊராக வழக்கு தொடுத்து குஷ்புவை தமிழ் கலாசாரக் காவலர்கள் எல்லாரும் அலைக்கழித்துக் கொண்டிருந்தபோது குஷ்புவை வைத்து நிகழ்ச்சி நடத்தி காசு பார்த்த ஜெயா டி.வி வாயைத் திறக்கவில்லை. அ.தி.மு.க கட்சியும் வாய் திறக்கவில்லை.இப்போது குஷ்புவைத் தங்கள் டி.விகளில் பயன்படுத்திவரும் தி.மு.க தலைமையும் அப்போது இந்தப் பிரச்சினையில் வாய் திறக்கவில்லை.



குஷ்பு சார்பாகவும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் அப்போது குரல் கொடுத்தவர்கள் யார் யாரென்றும் நாம் இப்போது நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். முதல் குரல்கள் என்னிடமிருந்தும் சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ்,, வழக்கறிஞர் ரஜினி, களப் பணியாளர் ஷெரீபா ஆகியோருடையவைதான். அ.மார்க்ஸ் எழுதிய துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த நீலகண்டன் திருமாவின் ஆதரவாளர்கள் தாக்குதலுக்குள்ளானார்.



அடுத்தடுத்து பேராசிரியை சரஸ்வதி, சாரு நிவேதிதா, லீனாமணிமேகலை, பிரீதம் சக்ரவர்த்தி, ஆனந்த் நடராஜன், வாஸந்தி, மாலன்,கனிமொழி, ப.சிதம்பரம், சோ ஆகியோர் ஆதரித்தார்கள். பின்னர் ஜனநாயக மாதர் சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தலித் முரசு இதழ் முதலியோர் வந்தார்கள். ஒவ்வொருவரின் ஆதரவும் வெவ்வேறு அளவிலானது என்றபோதும் அத்தனை பேரும் குஷ்புவின் கருத்துச் சுதந்திர உரிமையை ஆதரித்தார்கள்.



இப்போது உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு சொல்லிவிட்டது. ‘‘ பாதுகாப்பான உடலுறவு பற்றி பகிரங்கமாக விவாதியுங்கள். நமது இளைஞர்கள் எய்ட்சுக்கு பலியாகாமல் காப்பாற்ற இந்த பகிரங்கமான கருத்துப் பரிமாற்றம் தேவை’’ என்று டிசம்பர் 1,2005 எய்ட்ஸ் தினத்தன்று அப்போதைய அமைச்சர் அன்புமணியை அருகில் வைத்துக் கொண்டு தேசத்துக்கு விடுத்த வேண்டுகோளைத்தான் இப்போது உச்ச நீதி மன்றமும் இன்னொரு வடிவில் உறுதி செய்கிறது.



ஆனால் ராமதாஸ், திருமாவளவன், சன் டிவி, தமிழ் முரசு ஏடு,பழ. கருப்பையா, சீமான், தங்கர் பச்சான்,சரத் குமார், த.மு.மு.க,தி.மு.க, அ.தி.மு.க எல்லாரும் உரத்த மௌனத்தில் இருக்கிறார்கள்.



கருத்துச் சுதந்திரம் பற்றிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா ? இல்லையா ? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால், உங்கள் கடந்த கால அராஜகங்களுக்காக குஷ்புவிடமும், சுஹாசினியிடமும், அவர்களை ஆதரித்த எங்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்.



நீதி மன்றத் தீர்ப்பை ஏற்கவில்லையேன்றால் அதையாவது சொல்லித் தொலையுங்கள். உங்கள் அசல் முகங்களை நாடு தெரிந்துகொள்ளட்டும்.